வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழாவை நயினாதீவில் உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடாத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தினசரி அன்னதானத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழா தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் இன்று நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழா இம்மாதம் 20ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாள்கள் இடம்பெறவுள்ளது.

நயினாதீவு பகுதியிலுள்ள 30 அடியவர்கள் மட்டும் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளோம். அதேவேளை மகோற்சவ காலத்தில் அன்னதானம் வழங்குவதற்கும் சுகாதாரப் பிரிவினரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களில் இருந்து எவரும் ஆலயத் திருவிழாவில் அனுமதிக்கப்படமாட்டார்கள். அத்தோடு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருப்பவர்களும் கலந்து கொள்ள முடியாது.

எனவே இதனைக் கருத்தில் கொண்டு இம்முறை நயினாதீவு ஆலய உற்சவத்திற்கு வெளி இடங்களைச் சேர்ந்தவர்கள் எவரும் குறித்த ஆலயத்திற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அதேவேளை தேர், சப்பற திருவிழாக்கள் எதுவும் இடம்பெறமாட்டாது. ஆலய உற்சவங்கள் அனைத்தும் உள்வீதி உடனேயே நிறைவுபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.