அழகு என்ற சொல்லுக்கு முருகன் என்று பெயர் அனைவரின் மனதிலும் கூடி கொள்ளும் முருகனை ராஜ வடிவில் காண, கண் கோடி வேண்டும்.

குறிஞ்சி நிலக்கடவுளான முருகன் 16 திருக்கோலங்களில் அருளாட்சி புரிகின்றார்.

சக்திதரன் : ஒரு முகம், இரு கரங்கள், சக்திப்படையுடன் காட்சியளிப்பவர்

ஸ்கந்தன் : இடையில் கௌபீணம் மட்டும் தரித்து தண்டம் பற்றிய பழனி ஆண்டியின் திருக்கோலம்.

கஜவாகனன் : யானை மீதமர்ந்து நான்கு கரங்களுடன் கொண்ட கோலம்.

சரவணபவனன் : பன்னிரு கரங்கள், ஒரு முகம், ஆறு குழந்தையாகத் தோன்றி அம்பிகையால் ஒரு முகமாக மாற்றப்பட்ட திருக்கோலம்.

தேவசேனாபதி : ஆறுமுகம் – பன்னிருகரங்கள் கொண்டு இந்திரனின் மகளான தெய்வானையை மணந்த கோலம்.

சுப்பிரமணியன் : ஒரு முகம், நான்கு கரங்கள், ஆயுதம் பற்றிய கீழ்க்கரங்களால் அபயம், வரம் அளித்து அருளும் கோலம் கொண்டவன்.

கார்த்திகேயன் : ஆறுமுகங்களும் ஆறு கரங்களும் உடையவன். அபய-வரமளிக்கும் கரங்கள். பிற கரங்களில் ஆயுதங்கள் கொண்ட கோலம்.

குமரன் : நான்கு கரங்களுடன் தேவியான தெய்வானை வலப்புறத்தில் அமைய நின்ற திருக்கோலத்தில் அருள்பவன்.

ஷண்முகன் : ஆறுமுகங்களோடு பன்னிரு கரங்கள் ஆயுதங்கள் ஏந்திய நிலை. மயில் மீது முருகன் அமர்ந்திருக்க அருகில் தேவியர் நின்ற கோலம்.

தாரகாரி : சூரபத்மனின் தம்பியான தாரகாசுரனை அழிக்கப் பூண்ட கோலம். ஆறுமுகம் பன்னிரு கரங்களில் ஆயுதங்கள் ஏந்திய போர்த் திருக்கோலம்.

வள்ளிமணாளன் : தமிழரின் பண்பாடான களவு ஒழுக்கத்தின் மூலம் காதல்கொண்டு திருமணம் புரிந்த கோலம்.

பாலமுருகன் : சிறிய பாலக வடிவம், ஒரு கரத்தில் தாமரை மலர்கள், மற்றொரு கரத்தை இடைமீது இருத்திய அழகிய தோற்றம்.

சேனாளி : ஆறுமுகம் பன்னிரு கரங்கள், கீழிரு கரங்கள் அபய வரத முத்திரை, ஏனைய கரங்களில் ஆயுதங்கள்.

கிரௌஞ்சபேதன் : தாரகன், சூரனின் தம்பி இவன் கிரௌஞ்சமலை என்ற மலையின் வடிவில் தனது அண்ணனின் கோட்டையைக் காத்து நின்றான். சக்திவேலின் மூலம் அவனை அழித்து நின்ற திருக்கோலம். ஆறுமுகம், ஆயுதம் தாங்கிய பன்னிருத் திருக்கோலங்கள்.

சிகிவாகனன் : சூரனின் சம்ஹாரத்திற்குப் பின் மயிலான அசுரனின் மீது அமர்ந்த கோலம்.

பிரம்ம சாஸ்தா: பிரணவத்தின் பொருளறியா பிரம்மனை சிறையிலடைத்து, தானே அவரது படைப்புத் தொழிலை ஏற்றதால், பிரம்மனது பொருட்களான அட்சமாலை மற்றும் கெண்டியை ஏந்திய திருக்கோலம்.