இந்தப் பூவுக்குள்ளே தானே இறைவன் இறங்கி வந்து குடியிருக்கிறான். அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலர்தான் நாகலிங்கப்பூ.
நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம் இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும். உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்று கவனித்தால் ஒரு கைலாயமே கைக்குள் இருப்பது போல் இருக்கும். ஒரு சில நிமிடங்கள் நம் கவனத்தை ஒழுங்குபடுத்தி இந்தப் பூவின் மத்தியப் பகுதியில் இருக்கும் சிவ லிங்கத்தை உற்று நோக்கி அப்படியே நம்மை தியானத்தில் கொண்டு சென்று விட்டால் உடல் சிலிர்க்கும். உள்ளம் அமைதி பெறும். கயிலாயம் கண்ணுக்குள் விரியும்.

சிவபூஜைக்கு உரிய அஷ்ட மலர்களில் இது இடம் பெறவில்லை. பூமிக்கு வந்த சிவ மலர் என்பதாலோ என்னமோ விசேஷமான நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்க வடிவத்தைப் பெற்றுள்ளது. பாம்புகள் விரும்பி தஞ்சம் புகும் மரமாக நாகலிங்க மரம் உள்ளது .
விசேஷத்திலும் விசேஷமாக மரத்தில் பூக்கும் பூவாக வேர்ப் பகுதிக்கு சற்று மேலே கொத்துக் கொத்தாக இலைகளைக் கொண்ட கிளைகளில் பூக்காமல் தனக்கென்று தான் பூப் பதற்கு என்று பிரத்யேகமாக ஒரு கிளையை உருவாக்கிக் கொண்டு பூக்கும் மலராக நாகலிங்கப்பூ உள்ளது.
நாகலிங்க மரத்திற்கு ஏனைய தாவரங்களைப் போல பருவகால மாற்றங்கள் கிடையாதாம். என்றும் பசுமையான மரம் என்று போற்றப்படுகிறது. ஒரு நாகலிங்க மரத்தில் ஒரே நாளில் ஆயிரம் மலர்கள் வரை பூக்குமாம். நாகலிங்கப் பழம் மகா விசேஷம் ஒவ்வொரு பழமும் ஒரு கால்பந்து அளவுக்கு இருக்கும். அதில் 65 முதல் 550 விதைகள் வரை இருக்கும். இவைகள் முதிர்ச்சி அடைய சுமார் 12 லிருந்து 18 மாதங்கள் வரை ஆகுமாம்.

கடன் நீக்கி வல்லமை தரும் இந்த மரத்தின் இலைகளை அரைத்து தோல் நோய்களுக்கு மருந்தாகவும் இலைகளை மென்று தின்பதால் பல்வலிக்கு மருந்தாகவும் பட்டைகளையும் காய்களையும் பக்குவப்படுத்தி விஷ ஜுரத்துக்குமருந்தாகவும் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.