ருத்ராட்சம் என்பது சிவன் முதல் சித்தர்கள், வரை அணியக்கூடிய ஒரு மிக அற்புதமான, மிக சக்தி வாய்ந்த ஒரு பொருளாக பார்க்கப்படுகின்றது. சிவ பெருமான் தன்னை பொன்னால் அலங்கரிக்காமல் ருத்ராட்சம் கொண்டு அலங்கரித்துள்ளார் என்றால் அதன் மகத்துவம் அதிகமாகத் தானே இருக்கும்.

ருத்ரன்+ அட்சம் என்பதே ருத்ராட்சம். சிவனின் கண், அல்லது சிவனின் கண்ணில் இருந்து வந்தது என்று பொருள் கூறுகிறார்கள்.

ருத்ராட்சம் அணிவதாயின் முதலில் உண்மையான ருத்ராட்சம் அறிந்து வாங்க வேண்டும்.

ருத்ராட்சத்தில் ஒரு முக ருத்ராட்சம் முதல் 21 முக ருத்ராட்சம் வரை பல வகைகள் உள்ளது. அனைவரும் ஐந்து முக ருத்ராட்சமாவது கட்டாயமாக எப்போதும் அணிந்திருக்க வேண்டும்.

ருத்ராட்சத்தின் மேற்பகுதியில் காணப்படும் கோடுகளின் எண்ணிக்கையினை வைத்தே அதன் முகமானது குறிப்பிடப்படுகிறது.

தாவர வகைகளில் மின் காந்த சக்தி ஒரு குறிப்பிடும் அளவு உள்ளது ருத்ராட்சதில் மட்டும்தான். ருத்ராட்சத்தை அணிவதாயின் சிவப்பு நிற நூலில் அணியவேண்டும். அல்லது செம்புக் கம்பியிலோ, தங்கக் கம்பியிலோ, வெள்ளிக் கம்பியிலோ அணியலாம். ஒரு சிவனடியாரிடம் இருந்து ருத்ராட்சத்தை அணியும் வழிமுறைகளை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

ஒரு நன்னாளில் நமக்குகந்த ருத்ராட்சத்தை வாங்கி சுத்தமான நீரில் கழுவிய பின்பு காய்ச்சாத பசும்பால், தேன், கற்கண்டு பொடி, நெய், தயிர் ஆகிய ஐந்து பொருட்களையும் ஒன்றாக கலந்து அபிசேகம் செய்ய வேண்டும். பிறகு சுத்தமாக துடைத்துவிட்டு ஒரு வளர்பிறை திங்கட்கிழமை அதிகாலையில் திருகோவிலில் பூஜை செய்து அணியவேண்டும்.

ருத்ராட்சத்தை தினமும் அணிவதற்கு முன்பாக நமது இஷ்ட தேவதா மந்திரத்தை நிச்சயமாக சொல்ல வேண்டும். சர்வ மந்திரங்களும் வசியம் ஆகக்கூடிய சிறந்த காந்த ஈர்ப்பு மண்டலத்தைக் கொண்டது ருத்ராட்சம்.

Check this

ஒரு முக ருத்ராட்சம்

ஏக முக ருத்ராட்சம் சூரியனுக்கு உரியது, சகலவிதமான பித்ரு தோஷங்களை விலக்கி எல்லா நலன்களையும், நல்ல வாழ்வையும் தரக்கூடியது. ஏக முகம் எனப்படும் ருத்ராட்சம் மிகவும் அரிதான ஒன்று, பல வருடங்களுக்கு ஒரு முறையே தோன்றக்கூடியது. சிவபெருமானின் பூரண அருளை தரக்கூடியது. இதனை ஒரு படி அளவுள்ள எதாவது ஒரு தானியத்தின் அடியில் வைத்தால் தானாகவே மேல வரக்கூடிய தன்மை உள்ளது என்று ஒரு பழமையான நூல் தெரிவிக்கிறது.

இரு முக ருத்ராட்சம்

த்விமுக ருத்ராட்சம் அர்த்தநாரீஸ்வரருக்கும், நவக்கிரகங்களில் சந்திரனுக்கும் உரியதாகும். இதை அணிவதால் குடும்ப உறவுகளில் நல்ல சுமுகமான போக்கு நிலைக்கும். நம் உடலில் இருக்கும் நீர்த்தன்மையில் நன்மை தரத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஜாதகத்தில் சந்திர பலம் குறைதவர்களும், மனோ ரீதியான சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களும் இருமுக ருத்ராட்சம் அணிவதால் நல்ல பலன்களை பெறலாம்.

மூன்று முக ருத்ராட்சம்!

திரிமுக ருத்ராட்சம், அக்னி அம்சம் பெற்றது, செவ்வாய்க்கு உரியது. மனதில் தைரியத்தையும், துணிவையும் தருவதோடு உடலியக்கத்தில் துடிப்பான செயல்திறனையும் உண்டாக்கும். விளையாட்டுத் துறை, ராணுவத்துறை, தொழிற்சாலை போன்றவற்றில் உள்ளவர்கள் அணிந்தால் நல்ல பலன்களை தரும்.

நான்கு முக ருத்ராட்சம்

சதுர்முக ருத்ராட்சம் பிரம்மாவின் அம்சம் கொண்டது, புதனுக்கு உரியது. இதையணிவதால் சுவாச கோளாறுகள் கட்டுப்படும், திக்குவாய் உள்ளவர்களுக்கு பேச்சுத்திறன் மேம்படும். கணிபொறி, மின்னியல் ஆய்வுகள், நிர்வாக பொறுப்பு போன்றவற்றில் உள்ளவர்கள் இதை அணிவதால் நல்ல பலன்களை பெறலாம்.

ஐந்து முக ருத்ராட்சம்

பரவலாகக் காணக்கிடைக்கும் பஞ்சமுக ருத்ராட்சம் சிவ அம்சம் பொருந்தியது, குரு பகவானுக்கு உரியது. கல்வி அறிவையும், மனத்தின் சமநிலையையும் ஏற்படுத்தும். இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும், மேலும் இரத்த அழுத்தம் சமந்தமான நோய்களை நீக்கும். இது ஒரு காந்த ஆற்றலை உள்ளடக்கியது, நம்மை சுற்றி ஒரு கவசம் போன்று காப்பாற்றும்.

ஆறு முக ருத்ராட்சம்

சண்முக ருத்ராட்சம் முருகப்பெருமானின் அம்சம் கொண்டது, சுக்ரனுக்கு உரியது. மனத்தின் வசீகர சக்தியை மேம்படுத்தும். தொழில் ரீதியாக மற்றும் வெகுஜனத் தொடர்பு உள்ளவர்கள் அணிந்தால் ஜனவசிய சக்தியை பெற்று நல்ல பலன்களை பெறலாம்.

ஏழு முக ருத்ராட்சம்

சப்தமுக ருத்ராட்சம் மகாலட்சுமியின் அம்சம் கொண்டது, சனீஸ்வர பகவானுக்கு உரியது. சனிபகவானின் அலைவீச்சை சாதகமாக நன்மை தரும் விதமாக மாற்றக்கூடியது. வறுமை நீங்கவும், ஏழரை சனி மற்றும் சனி கிரக தோஷம் போன்றவற்றில் இருந்து விடுபட உதவும். இந்த ருத்ராட்சத்தை உடலில் அணிவதை விட பூஜை அறையில் வைத்து முறைப்படி வணங்குவதே நல்லது.

எண் முக ருத்ராட்சம்

அஷ்டமுக ருத்ராட்சம் விநாயகப் பெருமானின் அம்சம் கொண்டது, இராகுவின் அலைவீச்சை கட்டுப்படுத்தக் கூடிய காந்த மண்டல சுழற்சியை உடையது. ருத்ராட்சங்களிலேயே மிகவும் கவனமாக சோதனை செய்தபின்பு பூஜை அறையில் வைத்து முறைப்படி வணங்குவதே நல்லது. பெரும்பாலும் உடலில் அணிவதை தவிர்க்கப்படுகிறது. இந்த ருத்ராட்சம் நூதனமான அனுபவங்களை தரக்கூடியது, ஒருவரை அறிவியலின் அடிப்படைக்கு உட்படாத புதிரான விளைவுகளுக்கு உண்டாக்க கூடிய அதீத சக்தியின் சுழற்களம் அமையப்பெற்றது.

ஒன்பது முக ருத்ராட்சம்

நவமுக ருத்ராட்சம் அன்னை பராசக்தி, அத்யா சக்தியின் அம்சம் கொண்டது, கேதுவுக்கு உரியது. கேதுவின் கெடு பலன்கலான அடிபடுதல், கெட்ட கனவுகள், எதிர்மறை எண்ணங்கள் போன்ற சங்கடங்களை தீர்க்கும். இதனை அணிவதால் பொறுமையும், நிதானமும் நிலை நிற்பதோடு, மனதில் பயம் சார்ந்த உணர்வுகள் யாவும் விலகி விடும். பிற மொழிகளில் நிபுணத்துவம், இலக்கண, இலக்கியம் சார்ந்த அறிவின் மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்லும்.

பத்து முக ருத்ராட்சம்

தசமுக ருத்ராட்சம் மகாவிஷ்ணுவின் அம்சம் கொண்டது, தசாவதாரங்களையும் குறிப்பது போல பத்து முகங்களை கொண்டது. ஹரிஹரர்களின் திருவருளை ஒருங்கே பெற்று தருவதாக நம்பப்படுகிறது.

பதினோரு முக ருத்ராட்சம்

ஏகதச ருத்ராட்சம் ருத்ர அவதாரமான ஆஞ்சநேயரின் அம்சம் கொண்டது. மனத்தின் ஆற்றலை பன்மடங்காக ஆக்கக் கூடியது. பிரம்மச்சரியத்தில் நிலை பெற விரும்புவோர் இதனை அணிந்து நற்பயன் பெறலாம்.

பன்னிரு முக ருத்ராட்சம்

துவாதச ருத்ராட்சம் சூரிய பகவானின் திருவருளை பெற்றுத்தரக் கூடியது. அரசுத்துறை சார்ந்த வேலைவாய்ப்பை எதிர்பார்பவர்கள், பணியில் உயர்வு பெற விரும்புபவர்கள், ஆன்மிக பலம் வேண்டுவோர் இந்த பன்னிரு முக ருத்ராட்சம் அணியலாம்.

ருத்ராட்சம் அணிபவர் இறை சக்தியை தன்னிடம் வைத்துள்ளோம் என்ற பிரக்ஞையுடன் முறையான வாழ்வை நடத்தினால் அந்த இறை சக்தி அவர்களுக்கு ஆரோக்கியம், மன அமைதி அளிப்பதுடன் அவர்களை அனைத்து சூழல்களிலும் முன்னேற்றப் பாதையில் வழி நடத்திச் செல்லும் என்பது நிச்சயம்!

ஓம் நமச்சிவாய…